Friday, February 4, 2011

வெப்பம் - ஜோஷ்வா ஸ்ரீதர்


வைரமுத்து 'ஆயிரம் பாடல்கள்' புத்தக வெளியீட்டு விழாவில் பேசியபோது, அந்த புத்தகத்தில் உள்ள நூற்றுக்கணக்கான திரை இசை பாடல்களில் ஐந்து பாடல்கள் மட்டுமே எழுதிய பின் இசையக்கப்பட்டவை என்று கூறினார். பெரும்பாலும் தமிழ் திரை இசை பாடல்கள் மெட்டமைத்த பின் எழுதப்படுகிறது. ஆனால், எனக்கென்னவோ இன்றைய இசையமைப்பாளர்கள் மெட்டுக்குத்தான் பாட்டு என்று பிடிவாதம் பிடிப்பதில்லை என்று தோன்றுகிறது. இன்றைய பாடலாசிரியர்களின் பேட்டிகளே அதற்கு சாட்சி. இப்போது பாடல் உருவாவது ஒரு கூட்டு முயற்சி என்றாகிவிட்டது.

மெட்டுக்கு பாட்டா இல்லை பாட்டுக்கு மெட்டா என்பதை இப்போது இசையமைப்பாளர், பாடலாசிரியர் மற்றும் திரைப்படத்தின் இயக்குனர் கலந்து ஆலோசித்து முடிவு செய்கிறார்கள். பல சமயங்களில், ஒரே பாடலின் ஒரு பகுதி மெட்டுக்கு பாட்டு எழுதப்பட்டிருக்கும், பிற பகுதிகள் பாட்டெழுதிய பின் மெட்டமைக்கப்பட்டிருக்கும். இப்போது வெளியாகும் பாடல்களை கேட்கும் போது, இந்த பாடல் மெட்டுக்கு எழுதப்பட்டதா அல்ல எழுதி இசைமைக்கப்பட்டதா என்பதை சற்று நான் ஆராய்வது வழக்கம். ஜோஷ்வா ஸ்ரீதர் இசையமைத்த வெப்பம் பட பாடல்களை கேட்கும் போது, மெட்டுக்கு பாட்டா பாட்டுக்கு மெட்டா என்று எண்ணியபடி இருந்தேன். ஒரு முடிவுக்கு வந்தேன். சரியா தவறா என்று தெரியவில்லை. நீங்களே படித்துவிட்டு சொல்லுங்கள்.

ஒரு தேவதை வீசிடும் பாடலின் பல்லவியில் மட்டும் பதினெட்டு வரிகள் இருக்கிறது. எந்த இசையமைப்பாளரும் இவ்வளவு நீளமாக ஒரு பாடலின் பல்லவிக்கு மேட்டமைக்கமாட்டார். அப்படியே அமைத்தாலும், மெட்டு, நாம் யூகிக்க  முடியாதா திசைகளில் பயணம் செய்வதாக, இந்த பாடலில் உள்ளது போல் அமையப்பெறுவது அரிது. ஆனால், இந்த பாடலின் சரணம் மெட்டுக்கு பாட்டு வகை. ஒரே மேட்டில் இரண்டு சரணம் எழுதவேண்டிய கட்டாயம் இருப்பதால், பெரும்பாலும் சரணம் மெட்டுக்கு பாட்டாகத்தான் இருக்க வேண்டும். அல்லது, ஒரு சரணம் எழுதியபின் மெட்டமைத்துவிட்டு, அதே மெட்டுக்கு பாடலாசிரியர் இரண்டாவது சரணத்தை எழுதியிருக்கவும் கூடும். 

ஒரு தேவதை வீசிடும் பாடலை போல் அல்லாமல், மழை வரும் அறிகுறி பாடலின் சரணம் எப்படி உருவானது என்பதை அறிவதில் பெரிய கஷ்டம் இல்லை. சரணத்தில் முதல் நான்கு வரிகளிலும் தொற்றி கொண்டிருக்கும் 'ஒ ஒ ஒ' ஓலமே சொல்லிவிடுகிறது, இசையமைப்பாளர், வரிகளை எப்படி பாடலின் மைய தாளத்திற்கு பொருத்துவது என்று புரியாமல், குறுக்கு வழியில் எளிய தீர்வு கண்டிருக்கிறார் என்று. சரணத்தின் இறுதி வரியை மெட்டமைப்பதில் பெரிதும் திண்டாடி இருப்பது அப்பட்டமாக தெரிகிறது. ஆனாலும், அதை ஒட்டி எலும்பும் ஒற்றை வயலின் இசை, பாடலில் ஏற்படும் தற்காலிக தொய்வை சரிசெய்து விடுகிறது.

இந்த திரைப்படத்தின் சிறந்த பாடல் காற்றில் ஈரம். மெட்டுக்கு பாட்டா அல்லது பாட்டுக்கு மெட்டா என்று பிரித்தறிய முடியாது அளவுக்கு, ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்து பயணிக்கிறது. பூக்கள் எல்லாம் கைகள் நீட்டிடுதே என்ற வரியில், நெடிலான 'நீ'க்கு இடப்படும் ஸ்வரமும் நீண்டு ஒலிப்பது அழகு. இந்த வரி மெட்டுக்கு எழுதப்பட்டிருந்தால், பாடலாசியர் நீட்டப்பட்ட ஸ்வரத்தில் பொருந்துமாறு நெடில் கொண்டு  துவங்கும் வார்த்தையை உபயோகித்ததில் எந்த ஆச்சிரியமும் இல்லை. ஆனால், 'நீட்டிடுதே' என்று பாடலாசிரியர் எழுதிய பின் இசையமைப்பாளர் இசையமைத்திருந்தால், அவருக்கு ஒரு சபாஷ் சொல்லலாம்.  

இது ஒன்றும் பெரிய சாதனை இல்லை, ஆனால் இப்போது, எழுதிய பாடல் வரிகளை, ஒரு தாளத்திலும், மேட்டிலும் அமர்த்த, இசையமைப்பாளர்கள் படும் பாட்டை கேட்கையில் (அவள் அப்படி ஒன்றும் அழகில்லை பாடலின் சரணத்தை கேளுங்கள்), இது போன்று சின்ன சின்ன விஷயங்களையும் சுட்டி பாராட்டுவது முக்கியம் என்று நினைக்கிறேன்.

ஜோஷ்வா ஸ்ரீதர், காற்றில் வரும் பாடலின் சரனத்தில், வரிகளின் மெட்டில் சரியான இடங்களில் தொடர் புள்ளிகள் வைத்து சொற்றொடர்களாக அடுக்கி, கடைசி வார்த்தையின் கடைசி எழுத்தின் மீது பயணிக்கும் ஸ்வரத்தால் வரிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் பாங்கு அருமை. இந்த பாடலின் சொக்கவைக்கும் இனிமைக்கு இன்னொரு மிக முக்கியமான காரணம் பாடலை பாடிய கார்த்திக்கின் தமிழ் உச்சரிப்பு.

வெப்பம் திரைப்படத்தின் பாடல்களை, படத்தை பற்றி ஏதும் தெரியாத ஒருவரிடம் போட்டு கேட்கச்சொல்லி,  இந்த திரைப்படத்தின் கதையை யூகிக்கச்சொன்னால், கண்டிப்பாக யாரும் சென்னை குப்பத்தை களமாக கொண்ட கதை என்று சொல்ல மாட்டார்கள். கதைக்கும், கதை களத்திற்கும்  சம்பந்தமே இல்லாமல் ராக், பாப், ஹிப்ஹாப் வகை பாடல்கள் இருப்பது தமிழ் படங்களுக்கு புதிது இல்லை.

புதுப்பேட்டையில் எங்க ஏரியா உள்ள வராதே பாடலின் இசைக்கும் புதுப்பேட்டை ஏரியாவுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை, இருந்தும் அந்த பாடலை பற்றி யாரும் பெரிதும் குறை சொல்லாததற்கு காரணம், புதுப்பேட்டையை ஒத்த தமிழ்  வரிகள் மற்றும், பாடகர் அந்த பாடலை பாடிய விதம்.

வெப்பம் படத்தின் பாடல்களை பாடிய கிளிண்டன், சூஜேன், பென்னி தயால், தமிழ் உச்சரிப்பில் பெரிதாக பிழை இல்லா விட்டாலும், அவர்களின் குரல்களின் அதிர்வில் அதீத மேற்கத்திய வாசனை. ஏதோ ஆங்கில பாப் இசை பாடல்களை பாடுவதை போல் பாடி இருக்கிறார்கள். முதலில், சூஜெனின் குரலில் ஒலிக்கும் 'மழை வரும்' பாடல், நரேஷ் இயர் குரலில் ஒலிக்கும் போது, தமிழை தமிழாக உணர்ந்து பாடுவதன் சுகம் பளிச்சென தெரிகிறது.

இருந்தும், இசைத்தொகுப்பாக பார்த்தல், 'ராணி நான் மகராணி' பாடலை தவிர, வெப்பம் திரைப்பத்தின் அனைத்து பாடல்களும் நன்றாகவே இருக்கிறது. ஜோஷ்வா ஸ்ரீதர், தன்னை நிலை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று கவனாக இசையமைத்திருக்கிறார்.