Sunday, January 9, 2011

ஆடுகளம் - ஜி.வி பிரகாஷ்


தனுஷ், வெற்றி மாறன், ஜி.வி பிரகாஷ் கூட்டணியில் வெளிவந்த பொல்லாதவன் படத்தின் பாடல்கள்  எதுவும் எனக்கு அவ்வளவாக இப்போது நினைவில் இல்லை. ஆனால் இவர்கள் கூட்டணியில் அடுத்து வெளி வரப்போகும் ஆடுகளம் படத்தின் பாடல்கள் நிச்சயமாக நினைவில் நிற்கும்.
இளையராஜாவின் இஞ்சி இடுப்பழகாவை நினைவுபடுத்தும் தாளம் கொண்ட 'ஐயய்யோ' பாடல் ரம்யம். எஸ்.பி.பியின் குரலில் உள்ள கொஞ்சலும், கெஞ்சலும், தவிப்பும்  - ஐயய்யோ!  மெல்லிய குழலிசை பாடல் முழுதும் படர்ந்தோடி நம்மை தென்றலாய் வருடுகிறது. ஜி.வி பிரகாஷின் நேர்த்தியான இசைக்கூட்டு  கேட்போரை சுற்றி ஒரு இனிய காதல் சூழலை எளிதாக பரப்பிவிடும். இசைதட்டை பார்த்துதான் எஸ்.பி.பி.சரணும் கூட பாடியிருக்கிறார் என்பதை அறிந்தேன். காட்சியில் ஒரு கதாபாத்திரம் மட்டுமே வாயசைக்க போகும் பாட்டுக்கு பல குரல்களை உபயோகிக்கும் மோசமான பழக்கம் ரஹ்மானிடம் இருந்து எல்லோருக்கும் தொற்றிக்கொண்டுவிட்டது. இசையமைப்பாளர்கள், ஒரே பாடலை பல பாடகர்களை பாடவைத்து ஒலிப்பதிவு செய்து விடுகிறார்கள். இறுதியில் யாருடைய குரலை வைத்துக்கொள்வது என்று குழம்பி, எந்த பாடகரும் அந்த பாடலை சொந்த கொண்டாட முடியா வகையில், இவர் பாடியதில் ஒரு வரி, அவர் பாடியதில் ஒரு வரி என்று மாற்றி மாற்றி போட்டு, சேர்த்து, கோர்த்து விடுகிறார்கள்.
'யாத்தேபாடலில் ஜி.வி பிரகாஷின் மென்மையான மெட்டும் புதுமையான தாளக்கட்டும், காதல் வயப்பட்ட ஓர் இளைஞனின் ஆழ்மனதில் எழும் உணர்சிகளுக்கு இசை வடிவம் தந்திருக்கின்றது. இடையிடையில் துள்ளலான நாட்டுப்புற தாளத்துடன் வரும் 'யாத்தே யாத்தே' நம்மை ஆட வைக்கிறது. ஜி.வி பிரகாஷ் அனுபவித்து பாடியிருக்கிறார். ஆனால், ஏன் இவரால் நான்கு வரி கூட சேர்த்து பாடமுடியாதா? ஒவ்வொரு வார்த்தையாக பாடி, வெட்டி ஒட்டி பாடலாக கோர்த்திருக்கிறார். பாடலின் முடிவில் மேற்கத்திய சர்ச் கோரஸ் - தனுஷ் காதலிப்பது கிறித்துவ பெண்ணையோ?
'ஒத்த சொல்லால'  ஆடுகளம் திரைப்படத்தின் சிறந்து பாடல் என்று சொல்வது சற்று மிகையாக தோன்றலாம், ஆனால் உண்மை. குத்து பாட்டு என்று சொன்னால், பாடல் தரத்தில் குறைவு என்ற கூறுவதை போல் ஆகிவிட்டது. இது அந்த வகை குத்துபாட்டு அல்ல. நாட்டுப்புற பாட்டு என்று சொன்னால் மரியாதையாக இருக்குமோ? நாம் கேட்டு பழகிப்போன தாளம்தான் என்றாலும், பாடலின் மெட்டும், வரிகளும் உடனடியாக நம் மனதில் தொற்றிகொள்கிறது. 'பச்சை தண்ணி போல் என்ன சொம்புக்குள்ள ஊத்தி வெச்சு நித்தம் குடிச்சு என்ன கொன்னாடா' வரியில் இருக்கும் கற்பனை (பாடலாசிரியர் - ஏகாதசி), அதன் எளிமை, இனிமை யாத்தேவிலோ, ஐய்யய்யோவிலோ இல்லை. மண் வாசனை வீசும் வேல்முருகனின் குரல், தமிழ், அதில் அருவி போல் கொட்டும் உணர்சிகள் பாடலை ஒரு படி மேலே எடுத்துசெல்கிறது.
'போர்க்களம்' மற்றும் 'Warriors' போன்ற பாடல்கள் திரைப்படத்தில் இருப்பதற்கு, வெற்றி மாறன் ராப் இசை மற்றும் யோகி பியின் விசிறி என்பதை தவிர வேறு காரணம் இருக்க முடியாது. எனக்கு ராப் இசை பிடிக்குமா பிடிக்காதா என்பது முக்கியமில்லை, ராப் இசை ஆடுகளத்தின் களத்திற்கும் கதையோட்டதிர்க்கும் பொருந்துமா பொருந்தாதா என்பதே இங்கு கேட்க பட வேண்டிய கேள்வி. செல்வராகவன் சொல்லி யுவன் ஷங்கர் ராஜா 'புதுபேட்டை' படத்திற்கு சிம்போனி உபயோகித்தது போல் தான் இதுவும். இது ஆடுகளம் திரைப்படத்தின் பாடல் என்பதை மறந்துவிட்டு கேட்டால், பாடல் நன்றாகத்தான் இருக்கிறது. முக்கியமாக யுகபாரதி மெனக்கெட்டிருக்கிறார். ராப் இசையின் மீட்டருக்கு அர்த்தமுள்ள தமிழ் பாடல் எழுதுவது சுலபமல்ல.
ஜி.வி பிரகாஷ், தான் திரைப்படத்தின் பின்னணி இசையில் உபயோகிக்க போகிற ஓரிரண்டு மையஇசை துண்டை திரைப்படத்தின் இசைத்தட்டில் பெரும்பாலும் வெளியிடுகிறார். ஆடுகளம் இசைத்தட்டில் இருக்கும் 'லவ் ப்லாசம்ஸ்' என்கிற பாடல் அப்படியொரு மையஇசை துணுக்கு. பாடலில்  உள்ள கோரஸ் மற்றும் குழலிசை, காதல் மலரும் தருணத்தின் பரவசத்தையும், தாளம், மனதில் ஏழும் துள்ளலையும் இசையாக்கி ஒலிக்கிறது. கே. கே பாடியிருக்கும் 'ஏன் வெண்ணிலவே' பாடல் இழுவையோ இழுவை. சோக பாடல். பெரிதாக ஒன்றும் சொல்வதற்கில்லை.
ஒரு திரைப்படத்தின் இசைத்தட்டு வெளியீட்டு விழா எப்படி நடக்க வேண்டும் என்பதை கெளதம் வாசுதேவ் மேனன் விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் செய்து காட்டியும், யாரும் இங்கு திருந்துவதாக இல்லை. சன் Pictures திருந்தவிடப்போவதில்லை என்றும் சொல்லலாம்.  ஆடுகளம் திரைப்படத்தின் இசை  வெளியீட்டு விழாவை சன் தொலைகாட்சியில் பார்த்தேன். எங்கும் எதிலும் போலித்தனம். மறைவில் இசைத்தட்டு ஒலித்துகொண்டிருக்க, பாடகர்கள், பாடலை தாமே மேடையில் பாடவுது போல் நடித்துகொண்டும் நடனமாடிக்கொண்டும் இருந்தார்கள். சிறப்பு விருந்தினர்கள் அவரவர் பங்குக்கு படத்தில் சம்மந்தப்பட்ட எல்லோரையும் வானளாவ புகழ்ந்து விட்டு இருக்கையில் அமர்ந்தார்கள். இடையிடையில் எரிச்சலூட்டும் விஜய் சாரதி.  90% அனைத்து இசை வெளியீட்டு விழாக்களும் இப்படித்தான் நடக்கின்றது - ஒரு  திரைப்படத்தின் பிரதான விளம்பர விழாவாக.  

5 comments:

  1. தமிழில் எழுத ஆரம்பித்ததற்க்கு வாழ்த்துக்கள் :)

    யாத்தே யாத்தே... இது பிரகாஷ் குரல் தானான்னு நம்பவே முடியல...அடடா

    நல்ல விமர்சனம்...

    ReplyDelete
  2. யாத்தே யாத்தே interlude இல் பாபா வின் "மாயா மாயா" சாயல் கவனித்தீர்களா

    ReplyDelete
  3. Vignesh - சாயல் இருக்கு. ஆனா பெருசா உறுத்தல

    ReplyDelete
  4. Hi suresh Tamil la also u write well :) Nice review . I'm not patient enough to type in tamil :P

    ReplyDelete
  5. Perfect review :) I especially love the last para. I've got similar thoughts like yours on the fake music release functions.

    ReplyDelete