Wednesday, January 12, 2011

கண்டேன் - விஜய் எபெனேசர்


கண்டேன் பாடல்களை கேட்டேன். கேட்டவுடன், எளிதாக மனதில் தொற்றிக்கொள்ளக்கூடிய இனிதான மெட்டுக்கள். எங்கும் இளமை துள்ளும் கிடார். பாடலின் கீழ் அடுக்குகளில் அளவான வாத்தியங்கள். உறுத்தாத ஒலிக்கலப்பு.  மெட்டுக்கு ஏற்ற எளிமையான தாளக்கட்டும் தாளவாத்தியங்களும். பாடல் வரிகள் தெளிவாக கேட்கிறது. இசை – விஜய் எபெனேசர். இசை – ஹாரிஸ் ஜெயராஜ், என்று போட்டிருந்தாலும் நம்பி  இருப்பேன்.  ஹாரிஸ் ஜெயராஜ், ஒவ்வொரு படத்திலும் ஏதாவது ஒரு பாட்டிலாவது சேக்சொபோனை பிரதான வாத்தியமாகக்கொண்டு ஒரு இடையிசையை அமைத்துவிடுவார். 'எங்கே என் இதயம்' பாடலில் கேட்கும் சேக்சொபோன் இடையிசை சற்றே தூக்கலான ஹாரிஸ் வாசம்.

ஆனால், மின்னலே பாடல்கள் வெளிவந்த போதும், நாம் இதையேத்தான் சொன்னோம் – "ஏ.ஆர்.ரஹ்மான்  மாதிரியே போட்டிருக்கார் என்று". ஜி.வி.பிரகாஷின் "வெயில்" பாடல்களை கேட்டு ஏ.ஆர்.ரஹ்மான் மியூசிக் மாதிரியே இருக்கு என்றோம். ஜோசுவா ஸ்ரீதரின் "காதல்" பாடல்களை கேட்டும் சொன்னோம். விஜய் எபெனேசர், ஏ.ஆர்.ரஹ்மான்  போல இசையமைக்கிறார் என்று சொல்லாமல்,  ஏ.ஆர்.ரஹ்மான்  போல் இசையமைக்கிறார் என்று குற்றம் சாட்டப்பட்ட ஹாரிஸ் ஜெயராஜ் போல் இசையமைக்கிறார் என்று சொல்லும் போதே, ஏ.ஆர்.ரஹ்மான்  போல் இல்லாமல் ஹாரிஸ் ஜெயராஜ் ஏதோ செய்துக்கொண்டிருக்கிறார் என்பது ஊர்ஜிதமாகிறது. புதிய இசையமைப்பாளர்களை விமர்சிக்கும் விஷயத்தில்  நாம் கொஞ்சம் அவசர படுகிறோமோ என்று தோன்றுகிறது.

ஏ.ஆர்.ரஹ்மானின் பாதிப்பு இல்லாமல் ஒரு புதிய இசையமைப்பாளர் இந்திய திரைப்படத்திற்கு  இசையமைப்பதென்பது சுலபமல்ல. இதை இசையமைப்பாளர்களே ஒத்துகொள்கிறார்கள். திரை இசையை கேட்பவர்களும் இதை உணர்ந்துவிட்டதனால், சமீபகாலமாக, புது இசையமைப்பாளர்கள் ஏ.ஆர்.ரஹ்மான் மாதிரியே இசையமைக்கிறார்களே என்று யாரும் நொந்துக்கொள்வதில்லை. ஆனால், ஹாரிஸ் ஜெயராஜ் போல் இசையமைத்தால் சொல்லாமல் இருக்கு முடியவில்லை.

பொதுவாக, அனைத்து புது இசையமைப்பாளருக்கும் தம் இசை தனித்து கேட்க வேண்டும் என்கிற எண்ணம் இருக்கிறது. தனித்துவத்துக்காக அவர்கள் பயன் படுத்தும் மிகவும் பரவலான எளிய யுத்திகளில் ஒன்று - புதிய குரல்களை கண்டெடுத்து, பாடல்களை பாட வைப்பது. விஜய் அந்தோனி - வினையா, ஜானகி இயர், ஜெயதேவ். ஜோசுவா ஸ்ரீதர் - ஹரிசரண். ஜேம்ஸ் வசந்தன் - தீபா மரியம், பெல்லி ராஜ். ஹாரிஸ் விதியின்படி, கண்டேன் படத்தின் 'ஒரு பார்வை' பாடலை, பாம்பே ஜெயஸ்ரீ பாடியிருக்க வேண்டும். சாமர்த்தியமாக, விஜய் எபெனேசர், குரு ப்ரியா என்ற புது பாடகியை பாடவைத்து தப்பித்துவிட்டார்.

என்னை பொறுத்த வரையில், ஒரு புதிய இசையமைப்பாளர் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும்  வகையில் திரை இசையில் புதியதாய் ஏதும் செய்யத்தேவையில்லை, ஏ.ஆர்.ரஹ்மான் இசை போல் இல்லாமல் இருந்தாலே போதும். மெட்டமைக்கும் விதத்திலும், அதை சுற்றி வாத்திய    இசையை கோர்க்கும் விதத்திலும் தனித்துவம் மிக்கவர்கள் என்று யோசிக்கும் போது  என் எண்ணத்தில் சட்டென்று தோன்றும் இசையமைப்பாளர்கள்  யுவன் ஷங்கர் ராஜா, கார்த்திக் ராஜா, விஜய் அந்தோணி, ரமேஷ் விநாயகம் மற்றும் சமீபத்தில் வந்தவர்களில் தேவன் ஏகாம்பரம் (பலே பாண்டியா).

போடான் கதாஸ் ஆடியோ - நல்வரவு.

1 comment:

  1. Nice post.. Good thoughts regarding the ARRahman influence on new MDs..

    ReplyDelete