Monday, January 10, 2011

பதினாறு - யுவன் ஷங்கர் ராஜா


'பதினாறு' திரைப்பட பாடல்களில் நான் அதிகம் முனுமுனுக்கும் பாடல் - 'அடடா என் மீது'. பாடல், பல்லவியில்  பரவசத்திற்கும் சரணத்தில் ஆரவாரமற்ற இனிய அமைதிக்கும் மாறி மாறி இயல்பாக பயணம் செய்கிறது. கீழ் இசை அடுக்குகளில் ஒலிக்கும் தந்திக்கருவிகளின் பிஜ்ஜிகேட்டோ (தந்திக்கருவியை வில் கொண்டு வாசிக்காமல், வீணை நரம்புகளை மீட்டுவது போல் விரலால் மீட்டப்படும் முறைக்கு பெயர் Pizzicatto) மற்றும்  செலெஸ்டா இசை துண்டுகள், 'ல ல ல ல லா ல' வென பெல்லா ஷிண்டே சரனத்தில்  உருகும் மெட்டு என்று 'அடடா என்  மீது' பாடலில் எங்கும் எதிலும் யுவன் ஷங்கர் ராஜாவின் முத்திரை. பாடலின் பிரதான மெட்டில் உள்ள வேகமும், சுறுசுறுப்பும், பரபரப்பும், பட்டாம்பூச்சியின் பரவசம் கொண்ட நம் தமிழ் சினிமா காதலர்களின் மனநிலையை யுவன் ஷங்கர் எவ்வளவு ஆழமாக புரிந்து வைத்திருக்கிறார் என்பதற்கு சான்று.

ஷங்கர் மகாதேவனின் குரலில் 'வானம் நமதே' பாடல் மிகவும் சுவாரஸ்யமானது. ஊக்கம் தந்து எழுச்சியையும், மனமாற்றத்தையும் தூண்டும் இது போன்ற பாடலில் கடம் போன்ற மெல்லிய ஒலி கொண்ட தாள வாத்தியம் பயன்படுத்தியிருப்பது, இசையமைப்பாளர் பாடலின் மெட்டின் மீது வைத்துள்ள நம்பிக்கையை காட்டுகிறது. ஆங்காங்கே மற்ற கனமான ஒலி கொண்ட தாள வாத்தியக்கருவிகள் (கேரள செண்டை) சேர்ந்துகொன்டாலும், பாடலின் மைய உணர்ச்சி ஷங்கர் மகாதேவனின் துடிப்பான குரலிலும், கடத்தில் புரளும் தாளத்திலும் பயணம் செய்கிறது. அந்த இரண்டாவது இடையிசையில், பெண்கள் கோரஸ் எட்டும் உணர்வுபுள்ளிகளில் யுவன் ஷங்கர் ராஜா தான் யார் மகன் என்பதை நினைவுபடுத்துகிறார்.

ஔது (Oud), சாரங்கி, மின்னணு தாள சப்தங்கள் அடங்கிய வார்ப்புரு கொண்டு வார்க்கபட்டுள்ள 'காட்டு செடிக்கு' பாடல், யுவன் ஷங்கர் ராஜாவின் பல பாடல்களை நினைவு படுத்துகிறது. ஆனாலும், கேட்டு தலையாட்டாமல் இருக்கு முடியவில்லை. ஒலிகலப்பு  செய்யும் போது கார்த்திக் ராஜாவின் குரல் வாத்திய இசைகூட்டுக்கு கீழ் அமுக்கப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலாக 'யார் சொல்லி காதல் வந்தது' பாடலில் யுவன் ஷங்கர் ராஜாவின் குரலை அமுக்கியிருக்கலாம். யுவன் பாடியதாலோ என்னவோ, 'யார் சொல்லி' மனதில் நிற்கவில்லை. தீம் மியூசிக், 'காட்டு செடிக்கு' பாடலின் தொடர்ச்சி போல இருக்கிறது. இனிய புல்லாங்குழலில் புதிய மெட்டுடன் தொடங்கினாலும், தீம் மியூசிக் சட்டென்று 'காட்டு செடிக்கு' பாடலின் இடையிசைக்கு தாவுகிறது. பொதுவாக, இது போன்ற தீம் இசை துணுக்குகள் ஒரு பாடலின் பிரதான மெட்டை வைத்தே அமைக்கப்படும், ஆனால் இதில் ஒரு பாடலின் இடைஇசையை யுவன் பயன்படுத்திஇருக்கிறார். 

'பதினாறு' படத்தில், யுவனின் இசை, ஏற்கனவே பலமுறை கேட்டது போல் இருந்தாலும், சலிப்பு ஏற்படுத்துவதாக இல்லை. பாடல் புதுமையாக இருப்பதை விட இனிமையாக இருப்பதே முக்கியம்.

ஜனவரி 16 ஆம் தேதி யுவன் ஷங்கர் ராஜாவின் கச்சேரி சென்னை YMCA மைதானத்தில் நடக்கவிருக்கிறது. நேரு உள் விளையாட்டு அரங்கம் என்ன ஆச்சு? அன்று எதாவது மீண்டும் கலைஞருக்கு பாராட்டு விழா நடக்கிறதா?  யுவன் கச்சேரிக்கு நான் போகப்போவதில்லை. திறந்தவெளி மைதான கச்சேரிகளில் தொல்லைகள் அதிகம். இசையின் இனிமை காற்றில் பறந்துவிடுகிறது. கூட்டத்தின் கூச்சலே அதிகமாக கேட்கிறது. விஜய் டிவியில் ஒளிபரப்புவார்கள், அதை யாராவது பதிவு செய்து விளம்பரம் இல்லா வீடியோ பகுதிகளாக இணையத்தில் ஏற்றுவார்கள், அவற்றை தரவிறக்கி பார்த்துகொள்கிறேன். ரஹ்மானோட ஜெய் ஹோ கச்சேரிகளை போல இல்லாமல் இசைக்கு அதிக  முக்கியத்துவம் கொடுத்தால் நன்று. கச்சேரியில் யுவனின் திரை பின்னணி இசை துண்டுகள் கொண்ட ஓர் தொகப்பை எதிர்பார்க்கலாமா? கச்சேரியின் விளம்பரத்திற்காக யுவன் வெளியிட்டிருக்கிற ஒற்றை பாடல் அருமை. ஆனால், I will not be there for you Yuvan.

No comments:

Post a Comment