Monday, January 17, 2011

இளைஞன் - வித்யாசாகர்


சென்ற வருடம் 'தி ஹிந்து' நாளிதழில் வெளிவந்த ஒரு பேட்டியில் வித்யாசாகர் தான் 'இளைஞன்' திரைப்படத்தின் பாடல்கள் அனைத்திலும் உள்ள முகப்பு இசை, பின்னிசை மற்றும் இடையிசைக்கு சிம்போனி வடிவத்தில் இசைக்கோர்வை சேர்த்திருப்பதாகவும், அவற்றை மேற்கத்திய சிம்போனி இசைக்குழு வைத்தே ஒலிப்பதிவு செய்திருப்பதாகவும் கூறியிருந்தார். அன்றிலிருந்து நான் 'இளைஞன்' திரைப்படத்தின் இசைத்தட்டு வெளியீட்டிற்காக காத்துக்கொண்டிருக்கிரேன்.

திரைப்படத்தின் முன்னோட்டத்தை வைத்து, கதை எங்கு, எப்போது நடக்கிறது என்று ஒன்றும் புலப்படவில்லை. வித்யாசாகர், திரைப்படத்தின் இசைக்கு இருக்கவேண்டிய ஆதார ஒலியை தீர்மானம் செய்ய சற்றே குழம்பி தெளிந்திருக்கிறார். எம்.எஸ்.விஸ்வநாதன் பாணியில் மெட்டமைத்து, இளையராஜா பாணியில் பின்னிசை கோர்த்திருக்கிறார். இக்கால இளைஞர்களும் இசைய, மின் தாளக்கருவிகளில்  தாளம் சேர்த்திருக்கிறார். அந்த கலப்பில் விளைந்த ஒலி - காதில் தேன். பாடல்களின் மெட்டிலோ, இசைக்கோர்வையிலோ நாம் இதுவரை கேட்காத புதுமை ஏதும் இல்லை, ஆனால் காலத்தால் வற்றாத இனிமை உண்டு. அது போதும்.

சிம்போனி இசைக்குழு கிடைத்துவிட்டது என்று (சந்திரமுகி திரைப்படத்தின் பின்னணி இசை அமைப்பில் உணர்ச்சிவசப்பட்டதுபோல் ) உணர்ச்சிவசப்படாமல், அந்தந்த பாடலின் உணர்வுக்கு ஏற்றவாறு, அளவாக, சரியாக இசைக்கோர்வை செய்துள்ளார் வித்யாசாகர். 

சிம்போனி இசைக்குழுவில் உள்ள நூறு வாத்தியங்களும் சேர்ந்து கிளப்பும் இனிய குழப்பத்திலிருந்து விளையும் ஒரு எளிய தெளிவாக, 'மழையில் நனைந்த பூவனம்' பாடலின் மைய்ய இசை தன்னை தனித்து பிரித்து அருவித்துக்கொள்ளும் தருணம், கேட்போரின் மெய் சிலிர்த்து மயிர்கூச்செறியும். 'இமை தூதனே' பாடலின் தாளத்தில் சிறிது எனக்கு குழப்பம் இருக்கிறது, திரையில் காதலர்கள் வால்ட்ஸ் (Waltz) என்னும் மேற்கத்திய நடனத்தை ஆட, பாடலில் கடிகாரத்தின் டிக்-டிக் சத்தத்தை நினைவுபடுத்தும் டேங்கோ (Tango) வகை தாளம் ஒலிக்கிறது. கேட்க நன்றாகத்தான் இருக்கிறது.

புரட்சியை, எழுச்சியை தூண்டும் பாடல்களில், ற்றம்பெட், ற்றோம்போன் போன்ற உரக்க ஓதப்படும் வாத்தியங்கள் வீரத்தையும் வீரியத்தையும் முழங்குகின்றன. பாடலின் மெட்டும் நெளிந்து வளையாமல், நிமிர்ந்து நேர்வழியில் பயணிக்கிறது. 'இளைஞன்' இசைத்தொகுப்பில் நான் மிகவும் ரசித்த பகுதி, 'தோழா' பாடலின் தொகையறா. வீரம் பொதிந்த மெட்டு, அதை உணர்ந்து பாடிய அடர்ந்த குரல்குழு, அதை ஒத்து ஒலிக்கும் தந்திக்கருவிகள், மெல்ல தொடங்கி விண்ணை தொடும் வேகம் என்று அனைத்தும் சேர்ந்து, இந்த பாடல், கட்டிலில் படுத்து அரை தூக்கத்தில் பாடல் கேட்பவனை கூட விழித்தெழச்செய்யும்.

'ஒரு நிலா' பாடல், சிந்த் (Synth) தாளம், பேஸ் கிடார் கொண்டு, சிம்போனி வாசம் இல்லாமல் தொடங்குகிறது, ஆனால் இடையிசையிலும், பின்னணி இசையிலும் வித்யாசாகரின் இசைக்கோர்வை சிம்போனி இசைக்குழுவின் தந்திக்கருவிகளால் எழுப்பக்கூடிய உணர்வுகளின் ஆழ அகலத்தை அழகாக அளக்கிறது.

பாடகர்களின் குரல்களை மென்பொருள் வைத்து கடித்து குதறாமல், இயல்பாக ஒலிக்கவிடும் மிகச்சில இசையமைப்பளர்களில் வித்யாசாகரும் ஒருவர். சரியாக பாடகர்களை தேர்வு செய்திருக்கிறார். கார்த்திக், ஸ்ரேயா கோஸல், ஹரிஹரன், திப்பு, அன்வேஷா, சின்மயி பாடல்களை உணர்ந்து உயிர் கொடுத்திருக்கிறார்கள்.

No comments:

Post a Comment